சேலம் மாவட்டத்தில் புதையல் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கீரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள் (42). இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இவர்களது வீட்டிற்கு மந்திரவாதி என்று கூறி ஒருவர் வந்துள்ளார். இதையடுத்து, அவர்களது வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்காவிட்டால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறிய அவர், புதையலை எடுக்க ஒரு லட்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பழனியம்மாள், மந்திரவாதியிடம் ஒரு லட்சம் பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் பணத்தை வாங்கிய மந்திரவாதி புதையலை எடுக்காமல் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பழனியம்மாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், புதையல் எடுப்பதாக கூறி ஏமாற்றியது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த போலி மந்திரவாதி செல்வராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.