இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, “ திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசே மீண்டும் போட்டியிடும் என அறிவித்திருந்தார். மேலும் இடைதேர்தல் குறித்து கூட்டணி கட்சியுடனான ஆலோசனை நேற்று மாலை நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து இடைத்தேர்தல் தொடர்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2023ஆம் ஆண்டு வரும் பிப்ரவரி திங்கள் 27ஆம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து பேசி, ஏற்கனவே 2021ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றக் காரணத்தால், தற்போது இடைதேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.