பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு மற்றும் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் வெளியானது. இந்த திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளுக்காக தமிழக அரசு 11, 12, 13 மற்றும் 18 ஆகிய 4 நாட்களில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. ஆனால் அதனையும் மீறி நள்ளிரவு 1:00 மணி மற்றும் அதிகாலை 4:00 மணி அளவில் துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாக புகார் எழுந்தது.
இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்டம் 1957 இன் படி ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பது குறித்து குறிபானை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குச் சட்டம் 1957இன் படி திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தை வெளியிட்டது முதல்வர் மு.க ஸ்டாலின் மகன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.