ஆதரவு கோரிய அதிமுக: பாஜக நிலைப்பாடு என்ன? ஜெயக்குமார் வைத்த ட்விஸ்ட்!

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்டது. இந்நிலையில் இடைத்தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவே போட்டியிடுவதாக விருப்பம் தெரிவித்த நிலையில் தமாகா தனது ஆதரவை அதிமுகவுக்கு வழங்கியது.

கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகளிடம் ஆதரவு பெறும் வேலையை அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மேற்கொண்டுள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியனை சந்தித்த அதிமுக நிர்வாகிகள் இன்று காலை ஆதரவு கோரினர்.

கூட்டணியில் இடம்பெற்ற மற்றொரு கட்சியான பாமக தாங்கள் யாருக்கும் ஆதரவு வழங்கவில்லை, தாங்களும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தது.

இந்நிலையில் பாஜகவிடம் ஆதரவு கோருவதற்காக சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் சென்றனர். அங்கு அண்ணாமலையை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு கோரினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “பாஜகவிடம் ஆதரவு கோரியுள்ளோம். பாஜகவின் நிலைப்பாட்டை அக்கட்சி தலைவர் அறிவிப்பார்” என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக கூறினார். கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் பேசிவருவதாகவும் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். ஒருவேளை பாஜக போட்டியிட விரும்பினால் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என ஓபிஎஸ் கூறினார். அதைத் தொடர்ந்து தமாகா தலைவர் ஜிகே வாசனை ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து ஆதரவு கோரினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.