இந்து கடவுள் அவமதிப்பு: லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை

பிரபல ஆவணப்பட மற்றும் திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. அவர் தற்போது காளி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். இதில் காளி உள்ளிட்ட சாமி வேடம் அணிந்திருப்பவர்கள் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.

இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர். டில்லி, உத்தரபிரதேசம், மற்றும் மத்திய பிரதேசத்தில் சமூக ஆர்வலர்களின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் லீனா மணிமேகலையை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்குகளுக்கு எதிராக லீனா மணிமேகலை சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்குகளில் என்னை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றங்கள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டதுடன் மறு உத்தரவு வரும் வரை லீனாவை கைது செய்யவும் இடைக்கால தடை விதித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.