“தண்ணி வரல, பஸ் வரலன்னாலும் என்னிடம் கேட்கிறார்கள்…” – சீரியஸாகச் சொல்லும் கார்த்தி சிதம்பரம்

“தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடை எப்படி பார்க்கிறீர்கள்?”

“ரொம்ப தப்பு… சட்டமன்ற மரபை மீறி அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்பட்டு இருக்கிறார் ஆளுநர். ரவி மேற்கொண்ட நாகாலாந்து அமைதி பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்விதான். அதற்கு பின் தான் தமிழ்நாடு அனுப்பப்பட்டு இருக்கிறார். மாநில சுயாட்சி, சமூகநீதி, அரசியலமைப்பு, ஒருங்கிணைந்த தேசியம் போன்ற கொள்கைக்கு முரணாக இருப்பதால்தான், அதற்கான தலைவர்களின் பெயரைச் சொல்லாமல் மறுத்திருக்கிறார். அவரின் பின்னணியை பார்த்தால், இதில் ஒன்றும் விசித்திரம் இல்லை என்பது தெரியும்.”

சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்யும் ஆளுநர்

“சட்டமன்ற மரபு குறித்து பேசுகிறீர்கள், ஆளுநர் பேசும்போது மரபை மீறி காங்கிரஸ் எம்.எல்.ஏ அமளியில் ஈடுபடுவது மட்டும் எந்த வகையில் நியாயம்?”

“மரபை தாண்டி போராடவேண்டிய அவசியத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதுவும் ஜனநாயக முறைப்படி தான் நடந்தது. அதில் தவறில்லை.”

கமல் – ராகுல்

“தி.மு.க தலைமையில் கூட்டணியில் இருக்கும் நீங்கள், கமல்ஹாசன் காங்கிரஸோடு கூட்டணியில் இணைவார் என்பது வேடிக்கையாக இல்லையா?”

“மதசார்பற்ற கூட்டணிக்குள் கமல்ஹாசன் வருவார் என்றுதான் கூறினேன். கூட்டணியில் இருப்பதால், விருப்பத்தை கூடவா சொல்லக்கூடாது. அதே நேரத்தில் கமலை கூட்டணியில் சேர்ப்பது, சீட் கொடுப்பது எல்லாம் தி.மு.க கையில்தான் இருக்கிறது.”

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பை எனக்கு கொடுங்கள் எனக்கு கொடுங்கள் என நீங்களும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறீர்கள். கிடைக்க ஏதாவது அறிகுறி தெரிகிறதா?”

“காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்பது நியமன பதவி. இதற்கு முன் இருந்தவர்கள் எல்லாரும் அப்படி நியமிக்கப்பட்டவர்கள்தான். அது கிடைத்தால் வரம். தை பிறந்ததும் தலைவர் பொறுப்பை கொடுத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. நான் தலைமைக்கு வந்தால், கட்சியின் அடிப்படையில் இருக்கும் பிரச்னைகளை கண்டறிந்து, அதை மாற்றி புது பொலிவு கொடுக்க முயல்வேன்.”

கே.எஸ்.அழகிரி

“ஏன் தற்போதைய காங்கிரஸ் தலைவர் சிறப்பாகதானே செயல்பட்டு வருகிறார்?”

“இருக்கலாம்… ஆனால், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சவேண்டிய நேரம் வந்துவிட்டது. இது எனது தனிப்பட்ட கருத்து இல்லை. கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்து.”

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்

“தொகுதி பக்கமே நீங்கள் செல்வதில்லை என்று உங்கள் தந்தை ப.சிதம்பரத்திடம் நிர்வாகிகள் நேரடியாகவே புகார் கூறியிருக்கிறார்களே?”

“கட்சின்னு இருந்தால் நாலு பேர் நான்கு விதமாக சொல்லத்தான் செய்வார்கள். எல்லாரையும் என்னால் திருப்தி படுத்த முடியாது. தொகுதிக்கு எப்போதெல்லாம் சென்றேன் என பட்டியல் கொடுக்க நான் தயார். தொகுதி, தொகுதி, தொகுதி என்று எல்லோரும் பேசுகிறார்கள். எம்.பி என்றால் தொகுதிக்கு சுல்தான் என எல்லோரும் நினைக்கிறார்கள். உண்மையில் எம்.பி-க்கு எந்த அதிகாரமும் கிடையாது. 6 தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு எம்.பி தொகுதிக்கு ஒரு ஆண்டுக்கு வெறும் 5 கோடி ருபாய்தான் நிதி வருகிறது. ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ-க்குக்கூட 3 கோடி ரூபாய் வருகிறது. இது எம்.எல்.ஏ-வுக்கு வழங்கப்படும் நிதியை விட குறைவு. அதை வைத்துக் கொண்டு சமுதாயக்கூடம், வாட்டர் டாங்க், பஸ் ஸ்டாண்ட் கட்டிக் கொடுக்கலாம்.. அவ்வளவுதான். தொகுதிக்கு எம்.பி எதுவும் செய்யவில்லை என்று கேட்கவே முடியாது. யாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கூட மக்களுக்கு தெரியவில்லை. குடிநீர் வரல, பஸ் வரல-ன்னு எம்.பி-யிடம் கேட்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும். அது தவறு இல்லையென்றாலும், யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

கார்த்தி சிதம்பரம்

“ஆனால், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உங்களின் வருகை குறைவாக இருக்கிறது. தொகுதி குறித்து பெரிய அளவில் பேசவில்லையே?”

“அப்படியெல்லாம் இல்லை. பார்லிமென்ட் விவாதங்களில் கலந்து கொண்டு விவாதம் நடத்தி இருக்கிறேன். பார்லிமென்டில் வெறும் தொகுதி விஷயத்தை மட்டுமே பேசிக் கொண்டு இருக்க முடியாது. சர்வதேசம், நாட்டின் வளர்ச்சி குறித்தும் பேச வேண்டும். அப்படி பார்க்கும்போது, ஹை ரேட் டாப்பிக் குறித்து நான் நிறையவே பேசியிருக்கிறேன்.”

நாடாளுமன்றம்

“கஞ்சா பயன்படுத்துவது நமது கலாசாரத்தில் இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருக்கிறர்களே?”

“கஞ்சா குறித்து ரிக்வேதத்திலேயே இருக்கிறது. கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, கஞ்சா அடிப்பவர்களை குற்றவாளிகளாக பார்க்க கூடாது. அவர்கள் நோயாளிகள். அவர்களை மறுவாழ்வு மையங்களில் தான் சேர்க்க வேண்டும். ஆனால், இந்தியாவில் இதுபோன்ற மறுவாழ்வு மையங்களே இல்லையே.”

கார்த்தி சிதம்பரம்

“இதுபோன்ற சமூக கருத்துகள் குறித்து கார்த்தி ட்விட்டரை விட்டு களத்தில் இறங்கி எப்போது போராடுவார்?”

“தெருவில் இறங்கி போராட்டம் செய்தால் அது நடந்து விடும் என்பதே தவறு. அதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. சும்மா போராட்டம் நடத்தி கோஷம் போடுவதால் எதுவும் மாறிவிடாது. பிரச்னைக்காக காரணம் என்ன… அதை மாற்றுவதற்கு என்ன வழி இருக்கிறது. அதை நிர்வாகம் சார்த்து செயல்படுத்துவது எப்படி என்று யோசித்தால்தான் தீர்வுக்கிடைக்கும்”

கார்த்தி சிதம்பரம்

“நமது நாட்டின் சுதந்திரமே போராடி கிடைத்ததுதானே?”

“சுதந்திர போராட்டமெல்லாம் ரொம்ப ஓல்டு. அதெல்லாம் முடிந்துவிட்டது. தற்போதைய சூழ்நிலையில் சட்டம், நிர்வாகம் மூலமாகதான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு எதிரப்பு தெரிவித்து கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்தினால், பாதிக்கப்படும் மக்களே அதில் கலந்து கொள்வதில்லையே.”

“ஓல்டு என்பதால்தான் வாக்களித்த மக்களுக்கு நன்றிக்கூட சொல்லாமல் இருக்கிறார்களா?”

“அது வெறும் சம்பிரதாயம். அதை நான் ஏன் செய்யவேண்டும். முதலில் இந்த பழைய நடைமுறையில் இருந்து எல்லோரும் மீண்டு வரவேண்டும். பழையதையே பிடித்துக் கொண்டு இருக்கக்கூடாது. தொகுதிகளில் இருக்கும் 15 லட்சம் பேருக்கும் நேரடியாக நன்றி செல்லவே முடியாது. “

கார்த்தி சிதம்பரம்

” ஓட்டு கேட்கும்போது மட்டும் அவ்வளவு பேரையும் நேரில் சந்திக்க நடையோ நடையாக நடத்தீர்களே… அப்போது தெரியவில்லையா?”

“ஆமாம்… எனது செயல்பாடை முன்வைத்து ஓட்டுக் கேட்க சென்றேன். ஒரு உண்மையை வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் 95 சதவிகித மக்களுக்கு, அவர்களின் எம்.பிக்கள் பெயரே தெரியாது.”

” அதற்கு எம்.பி.களின் செயல்பாடுதானே முக்கியக்காரணம்?”

“பொதுமக்களுக்கு தேவை நல்ல சர்வீஸ்தான். அதை நான் செய்கிறேன். ஒரு தனியார் நிறுவனம் மூலம் தொகுதிக்கு 2 கோடி ரூபாய் நிதி கொண்டு வந்து இருக்கிறேன். இதைபோல பல திட்டங்களை தொகுதிக்காக செய்து வருகிறேன். அது முக்கியமா… இல்லை நன்றி சொல்வது முக்கியமா… தொகுதி மக்கள் எனது தேசிய பார்வையைதான் பார்க்கிறார்கள்.

கார்த்தி சிதம்பரம் மாட்டு வண்டியில்

“பேசி, போராட்டம் நடத்தி ஒன்றும் மாறபோகிறதில்லை என்று சொல்லும் நீங்கள், ஏன் ட்விட்டரில் மட்டும் கருத்து தெரிக்கிறீர்கள்?”

“எனது கருத்தை தடையின்றி, வெளிப்படையாக சொல்வதற்கான களமாக சமூக வலைத்தளங்கள் இருக்கிறது. ”

” ராகுல் காந்தியின் நடைப்பயணத்தையாவது ஏற்றுக் கொள்வீர்களா”?

“நிச்சயமாக. அவர் செய்வது சாதரணமான காரியமில்லை. தொடர்ந்து 5 மாதம் காலையில் எழுந்து நடப்பதற்கு தனிநபர் ஒழுக்கம் இருக்கவேண்டும். ராகுலுக்கு அது அதிகமாக இருக்கிறது. இந்த நடைபயணம் கட்சிக்காகவோ, ஓட்டுக்காகவோ இல்லை. கொள்கைக்காக… நாட்டை ஒருங்கிணைக்கும் கொள்கைக்காக… அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.”

பாரத் ஜோடோ யாத்திரை

“அப்படியென்றால், உங்கள் கொள்கைகளையெல்லாம் முன்வைத்து, தமிழ்நாட்டில் ஒரு நடைப்பயணமாவது செய்யலாமே?”

” ராகுலைப் போல் எனக்கு ஒழுக்கம் இல்லையே…”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.