பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது கஞ்சா போதையினால் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டையைச் சார்ந்த முருகேசன் என்பவர் மகன் விக்னேஷ் (27) இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். அதே பகுதியைச் சார்ந்தவர் பிரவீன். இவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர். மனம் போன போக்கில் ஊர் சுற்றித்திரிந்து அந்தப் பகுதியில் தன்னை ஒரு பெரிய ரவுடியாக காட்டிக் கொண்டவர்.
சம்பவம் நடந்த தினத்தன்று விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பொங்கல் பண்டிகைக்காக விளையாட்டுப் போட்டிகளை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த கஞ்சா ஆசாமி பிரவீன் பொதுமக்களை தொந்தரவு செய்துள்ளார். இதனை அறிந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பிரவீனை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் விளையாட்டுப் போட்டிகள் முடிந்து மைதானத்தில் செல்போன் பேசிக் கொண்டிருந்த விக்னேஷை மீனை வெட்ட பயன்படும் கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். அவரது கதறல் சத்தம் கேட்டு வந்த நண்பர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் லாரி ஓட்டுனர் விக்னேஷ்.
இதனை அறிந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து கொலையாளி பிரவீனை தேடி வருகிறது. மேலும், தேவையில்லாத பதட்டத்தை தவிர்க்க விக்னேஷின் உடலை கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறது காவல்துறை.