7 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை உரிய காலத்திற்குள் தெரிவிக்காததால் ஏழு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் குற்றம் செய்தது மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழு பேரை ஒரே நேரத்தில் குண்டர் சட்டத்தில் அடைக்க கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஏழு பேர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், “கைது செய்யப்பட்டதிலிருந்து ஏழு நாட்களுக்குள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்பட வேண்டுமென சட்டம் உள்ளது. ஆனால், தங்கள் உறவினர்களுக்கு இதுதொடர்பான தகவல் தெரிவிக்கவில்லை. மேலும், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பான உத்தரவை தமிழில் மொழி பெயர்த்தும் வழங்கவில்லை” என்று கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”ஏழு பேரும் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கே உத்தரவு அனுப்பப்பட்டது. எனினும், அதனை அவர்கள் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், ”அரசின் வாதம் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. உத்தரவு நகலை அவர்கள் பெற மறுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை.” எனக்கூறி ஏழு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.