வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குவஹாத்தி: ‘ஷாருக்கான் யார் என எனக்கு தெரியாது’ என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கேட்ட நிலையில், அவருடன், அதிகாலை, 2:00 மணிக்கு தொலைபேசியில் பேசிய ஷாருக்கான், தான் நடித்த படம், பிரச்னையில்லாமல் வெளியாக உதவி கோரினார்.
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
பாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தின் பாடல் காட்சியில், காவி உடையில் நடிகை தீபிகா படுகனே கவர்ச்சி நடனம் ஆடியதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அசாமில் உள்ள ஒரு தியேட்டரில் ஒட்டப்பட்ட பதான் பட போஸ்டரை கிழித்து, ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அசாம் முதல்வரிடம் செய்தியாளர்கள் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ‘ஷாருக்கான் யார் என எனக்கு தெரியாது. நீங்கள் கூறும் படம் பற்றியும் எதுவும் தெரியாது’ என்றார்.
இதற்கிடையே அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
நடிகர் ஷாருக்கான், தொலைபேசி வாயிலாக நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, பதான் திரைப்படம் வெளியாக உள்ள தியேட்டரில் நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார். சட்டம், ஒழுங்கை மாநில அரசு சரியாக கையாளும்; கவலை வேண்டாம் என, அவரிடம் உறுதி அளித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement