இந்தூர்: ஒற்றுமை யாத்திரை நடத்த இந்தியா என்ன உடைந்தா இருக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இம்மாதத்துடன் இந்த யாத்திரை நிறைவடைகிறது. இந்நிலையில் இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பேசுகையில், “இந்தியாவில் வெற்றுப்புணர்வு மேலோங்கி இருக்கிறது என்று சிலர் கூறுவது நாட்டை இழிவுபடுத்தும் செயல். நாட்டில் வெறுப்பு இருக்கிறது என்று கூறி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தும் ராகுல் காந்திக்கு நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். காங்கிரஸ் தலைவர்கள் நம் நாட்டின் வீரர்களின் வீரத்தை துணிவை கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். இந்தியா என்ன உடைந்தா இருக்கிறது? அதை ஒரு அரசியல் கட்சி ஒற்றுமைப்படுத்த. 1947ல் இந்தியா பிரிவினையை சந்தித்துவிட்டது. இனி இந்த்யா ஒருபோதும் உடையாது. இந்தியாவை யார் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடும் காலம் கடந்துவிட்டது. இந்தியாவின் பெருமிதத்திற்கு குறை வரக்கூடாது. அதனால் ராகுல் காந்தி இந்தியாவின் பிம்பத்தை சிதைக்காமல் இருந்தால் போதும். அரசியல் என்பது அரசாங்கம் அமைப்பதற்கு மட்டுமல்ல நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கும் தான்” என்றார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசிய ராஜ்நாத் சிங், “லஞ்சத்தை ஒடுக்க பிரதமர் நரேந்திர மோடி இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கைகள் எடுத்த்ள்ளார். அதனால் தான் இன்று இந்தியா உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக ஒளிர்கிறது. 2047ல் இந்தியா உலகின் முதல் பணக்கார நாடாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை” என்றார்.