சென்னை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 12 பேரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை நிறைவு பெற்றது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை கடந்த 18-ம் தேதி தொடங்கியது. அவர்களிடம் ராம்ஜெயம் கொலை குறித்து 12 கேள்விகளை தடயவியல் நிபுணர்கள் கேட்டு பதில்களை பெற்றனர்.
இந்நிலையில், டெல்லி தடய அறிவியல் துறை அதிகாரி ஜான்மோசஸ் முன்னிலையில், சிவாஎன்பவரிடம் உண்மை கண்டறியும் சோதனை மீண்டும் நேற்று நடந்து முடிந்தது.
சோதனை தொடர்பான அனைத்தையும் அறிக்கையாக தயார் செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் வழங்க இருக்கின்றனர்.
அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் மேற்கொள்வார்கள்.