வடகிழக்கில் கிறிஸ்துவ வாக்குகள்; மாறிய இமேஜ்… தேர்தலில் பாஜகவின் ராஜதந்திரம்!

நடப்பாண்டில் முதல் சட்டமன்ற தேர்தல் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறுகிறது. திரிபுராவில் பிப்ரவரி 16, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27 ஆகிய தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை கிறிஸ்துவ வாக்குகள் தான் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை இந்துத்துவா இமேஜ் கொண்ட பாஜக எப்படி அறுவடை செய்யும் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

வடகிழக்கு அரசியல்

இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே செல்லுபடியான பாஜகவின் அரசியல் வடகிழக்கில் எடுபடுமா? குறிப்பாக பூர்வகுடிகள் எனப்படும் மலைவாழ் பழங்குடி மக்கள் அதிகமுள்ள வடகிழக்கில் எப்படி கவனம் ஈர்ப்பர்? போன்ற கேள்விகளுக்கு கடந்த தேர்தலிலேயே விடை காணப்பட்டு விட்டது. அங்கிருந்த பிராந்திய கட்சிகளை வசப்படுத்தி தங்களின் கால் தடத்தை பாஜக பதித்து விட்டது. வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களில் அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், திரிபுரா ஆகிய நான்கில் பாஜக முதல்வர்கள் பதவி வகித்து வருகின்றனர்.

பாஜகவின் திட்டம்

நாகாலாந்து, மேகாலயா ஆகியவற்றில் ஆளும் அரசுடன் கூட்டணி கட்சியாக இருக்கிறது. மிசோரம் மாநில சட்டமன்றத்தில் மட்டும் தான் பாஜக கால் பதிக்கவில்லை. ஆனால் இங்கு ஆளும் கட்சியாக இருக்கும் மிசோ தேசிய முன்னணி ஆனது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது. வடகிழக்கில் மொத்தமுள்ள 24 மக்களவை தொகுதிகளில் 17 இடங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வசம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்று தனது இமேஜை சற்று உயர்த்தி கொண்டது.

அடுத்து வரும் தேர்தல்

கிராமம் கிராமமாக பாஜகவின் கொடியை கொண்டு சேர்த்துள்ளனர். இந்துத்துவா அடையாளத்தை மாற்றி கிறிஸ்துவர்களையும் அரவணைக்கும் கட்சி என்ற பிம்பத்தை உண்டாக்கி இருக்கின்றனர். போப் ஆண்டவரை பிரதமர் மோடி சந்தித்தது முதல் தேவாலயங்களில் சென்று பிரார்த்தனையில் ஈடுபடுங்கள் என அறிவுறுத்தியது வரை பலவும் பிரச்சார யுக்தியாக முன்னெடுக்கப்படுகிறது.

தேசிய அளவில் தவிர்க்க முடியாத கட்சி, மாநில அளவில் நலத்திட்டங்களை பெற மத்திய அரசின் தயவும் தேவை என்பதை அடிக்கடி நினைவுபடுத்தி வருகின்றனர். இந்த சூழலில் வரப் போகும் தேர்தலில் தனித்து களமிறங்கி கிறிஸ்துவ வாக்குகளை அறுவடை செய்யும் அளவிற்கு வளர்ந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திரிபுரா

தற்போது பாஜக, IPFT ஆகியவை இணைந்து ஆளும் கூட்டணியாக திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில் காங்கிரஸில் இருந்து பிரிந்து ”திப்ரா மோதா” என்ற கட்சியை தொடங்கியவர் பிரத்யோத் பிக்ராம் மாணிக்யா தேப்பர்மா. இவருக்கு பழங்குடியின சமூக மக்களின் வாக்குகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் IPFTல் இருந்து விலகி திப்ரா மோதாவில் இணைந்து வருகின்றனர். இதனால் திப்ரா மோதாவின் செல்வாக்கு உயர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் சவாலை தனித்து சமாளிக்கும் அளவிற்கு பாஜக வளர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக திப்ரா மோதா கட்சி முன்வைக்கும் ’கிரேட்டர் திப்ராலாந்து’ என்பது வெறும் கனவு மட்டுமே. இந்த விஷயத்தை முன்வைத்து மக்களை உணர்ச்சி வசப்படுத்தி முட்டாள் ஆக்க பார்க்கின்றனர். இது ஒருபோதும் எடுபடாது என்று பாஜக திரிபுரா மக்கள் மத்தியில் காய்களை நகர்த்தி வருகிறது.

நாகாலாந்து

NDPP கட்சியின் நெய்பியூ ரியோ முதல்வராக இருக்கிறார். ஆளும் கூட்டணியில் பாஜகவும் ஒரு அங்கமாக உள்ளது. வரும் தேர்தலில் இரு கட்சிகளும் 40:20 என்ற விகிதத்தில் தொகுதிகளை பங்கிட்டு கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக இருந்தாலும் கூட்டணியை இழந்துவிடக் கூடாது எனக் கருதி ஒப்பந்தத்திற்கு ஓகே சொல்லியிருக்கிறது. அதேசமயம் வாக்கு சதவீதத்தை அதிகரித்து கொள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.

இம்மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் தனி நாகாலாந்து வேண்டும் என்று தொடர் குரல் கொடுத்து வருகின்றனர். தனி கொடி, அரசியலமைப்பு வேண்டும் என இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி விஷயம் கைமீறி போகாமல் பாஜக பார்த்து கொண்டிருக்கிறது. இம்முறையும் அதே வியூகத்தை கையிலெடுக்கும் எனத் தெரிகிறது.

மேகாலயா

கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டும் பாஜக வென்றது. இம்முறை அதை 10ஆக அதிகரிக்க மும்முரம் காட்டி வருகிறது. இம்மாநில கிறிஸ்துவ பழங்குடியின மக்கள் மத்தியில் தனது இந்துத்துவா இமேஜை உடைத்து மக்களுக்கான தேசிய கட்சி என்ற பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளது.

எல்லாவற்றுக்கும் டபுள் எஞ்சின் அரசு என்ற யுக்தியை கையிலெடுத்து வருகிறது. மேலும் மற்ற கட்சிகளில் இருந்து எம்.எல்.ஏக்களை கவரும் வகையில் பாஜக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தீவிரம் காட்டி வருகிறது. தனித்து களமிறங்கி தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கணக்குகளை போட்டு வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.