அண்ணா பல்கலை. பருவத்தேர்வு முறைகேடு விவகாரம்: தவறு செய்த 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை: அண்ணா பல்கலை. பருவத்தேர்வு மறுமதிப்பீட்டில் தவறு செய்த 2 அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 510 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான பருவத்தேர்வு அண்ணா பல்கலை. சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2017 ஏப்ரல், நவம்பர் மாதங்களில் நடந்த பருவத் தேர்வுகளில் தோல்வி அடைந்த, குறைந்த மதிப்பெண் பெற்ற சுமார் 3 லட்சம் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததாகவும், அதில் சிலருக்கு தேர்ச்சி மதிப்பெண், கூடுதல் மதிப்பெண் வழங்க பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

விசாரணையில், பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் உட்பட பேராசிரியர்கள் பணம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அப்போது தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா உட்பட பலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்த 2019-ல் சிறப்பு குழுவை அண்ணா பல்கலை. அமைத்தது. அந்த குழு மார்ச் மாதம் அளித்த ஆதாரங்களின்படி, தேர்ச்சி மதிப்பெண் வழங்க வெளிநாட்டு மாணவர்களிடமும் பணம் வசூலித்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, முறைகேட்டில் சம்பந்தப்பட்ட 4 பேராசிரியர்களையும் அண்ணா பல்கலை. தற்காலிக பணிநீக்கம் செய்தது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க 2021-ல் முன்னாள் துணைவேந்தர் எஸ்.காளியப்பன் தலைமையில் ஒருநபர் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி, முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் முன்னாள் கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஸ்ரீனிவாசலு, முன்னாள் துணை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வமணி ஆகிய 2 பேரையும் உதவி பேராசிரியர்கள் நிலைக்கு பதவி இறக்கம் செய்யவும், வரும் காலத்தில் நிர்வாக பதவிகளை இவர்கள் வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பதவி இறக்கம் என்ற எளிய தண்டனை ஏற்புடையது அல்ல. இதில் அரசு தலையிட வேண்டும் என்று பேராசிரியர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.