அமெரிக்க அதிபர் பைடன் இல்லத்தில் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலக்கட்டத்திலும், எம்.பியாக இருந்தபோதும் அவர் நிர்வகித்து வந்த முக்கிய ஆவணங்களை அரசு ஆவணக் காப்பக்கத்தில் ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அதிபர் வீட்டில் சோதனை நடந்துமாறு அமெரிக்க நீதித் துறை உத்தரவிட்டதன் அடிப்படையில், எஃப்.பி.ஐ அதிகாரிகள் அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் (குறிப்பாக 6 ரகசிய ஆவணங்கள்) கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆவணங்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எம்மாதிரியான ஆவணங்கள் கண்டறியப்பட்டன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்தச் சோதனை குறித்து ஜோ பைடனின் வழக்கறிஞர் பாப் கூறும்போது, “அதிகாரிகள் தனது இல்லத்தில் சோதனையிட முழு அனுமதியையும் அமெரிக்க அதிபர் வழங்கினார். சுமார் 12 மணி நேரம் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது” என்றார்.

முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில், ஜோ பைடனின் வில்மிங்டன் இல்லத்தில் சில ரகசிய அரசாங்க பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், வாஷிங்டன் டிசியில் உள்ள பைடனின் தனியார் அலுவலகத்திலும் சில ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆவணங்களை ஒப்படைக்காத விவகாரத்தில் பைடனை ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களே விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.