உச்சநீதிமன்றத்தை மீண்டும் வம்புக்கு இழுத்த ஒன்றிய சட்ட அமைச்சர்.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது.

இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. அதனால் தான் தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி ஏற்பு விழாவைக் கூட பிரதமர் நரேந்திரமோடி புறக்கணித்தார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில், தலைமை நீதிபதி பதவி ஏற்பில் பிரதமர் கலந்து கொள்ளாதது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், கடந்த கடந்த நவம்பரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார். கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைப்பதாகவும், இதேபோல், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைப்பதாகவும் விமர்சித்தார்.

அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரும், நீதி அமைப்பு பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துவதாக அதிருப்தி தெரிவித்தார். இந்தநிலையில் நாட்டின் நீதி அமைப்பை ஆளும் பாஜக கைப்பற்ற துடிப்பதாக காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி கபில்சிபல் தெரிவித்தார். இது குறித்து ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் சட்ட அமைச்சருமான கபில் சிபல் கூறும்போது, ‘‘அரசாங்கம் நீதித்துறையை கைப்பற்ற முயற்சிக்கிறது.

சட்ட அமைச்சருக்கு நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பற்றி நன்றாகத் தெரியவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் பற்றி அவருக்குத் தெரியாது என்று நான் முன்பே கூறியுள்ளேன். அது போல அனைத்து நிறுவனங்களும் அவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுதந்திரத்தின் கடைசி கோட்டை நீதித்துறை. உயர் நீதித்துறைக்கு நீதிபதிகள் நியமனம் குறித்த இறுதி வார்த்தை அரசாங்கத்திடம் விடப்பட்டால், அவர்கள் இந்த நிறுவனங்களை, அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சியின் சித்தாந்தத்துடன் இணைந்த நபர்களால் நிரப்புவார்கள்” என தெரிவித்தார்.

இந்தநிலையில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறும் முறை மாறும் என ஒன்றிய் சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லி பார் கவுன்சில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசும்போது, ‘‘ நீதிபதிகள் தேர்தலில் போட்டியிடவோ அல்லது பொது விசாரணையை எதிர்கொள்ளவோ தேவையில்லை. இன்னும் அவர்கள் தங்கள் செயல்கள், அவர்களின் தீர்ப்புகள் மூலம் மக்கள் பார்வையில் உள்ளனர். மக்கள் உங்களைப் பார்த்து நியாயம் தீர்க்கிறார்கள். உங்கள் தீர்ப்புகள், உங்கள் பணி செயல்முறை, நீங்கள் எப்படி நீதி வழங்குகிறீர்கள் என்பதை மக்கள் பார்க்கலாம், மதிப்பிடலாம்.

சமூக ஊடகங்களின் வருகையால், மக்கள் இப்போது பேசும் சக்தியைப் பெற்றுள்ளனர். சமூக ஊடகங்களில் நீதிபதிகள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகம் குறித்து தலைமை நீதிபதி எனது உதவியை நாடினார். அதை எப்படி கட்டுப்படுத்துவது? இப்போது, நீதிபதிகள் சமூக ஊடகங்களில் அதற்கு பதிலளிக்க முடியாது. அரசாங்கம் ஒரு உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது. நான் அதை கவனத்தில் எடுத்து தீர்வை பெற்றுள்ளேன்.

1947 முதல் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே தற்போதுள்ள அமைப்பு தொடரும் என்று நினைப்பது தவறாகும், அது ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது. மாறிவரும் சூழ்நிலையே தேவையை ஆணையிடுகிறது, அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்தை நூறு முறைக்கு மேல் திருத்த வேண்டியிருந்தது’’ என்றார். ஏற்கனவே உச்சநீதிமன்றத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே மோதல் உள்ள நிலையில், சூசகமாக கொலிஜியம் அமைப்பு மாறும் என சட்ட அமைச்சர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.