காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல், தனது பணியை முடித்துவிட்டு இரவு தனது வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் அவரை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பிச்சென்றனர்.
இதேபோல், சேக்குப்பேட்டை கவரை தெரு அருகே வேலைக்கு சென்று விட்டு மிதிவண்டியில், வீடு திரும்பி கொண்டிருந்த மாரியப்பன் என்பவரை கையால் தாக்கி அவரிடமிருந்தும் செல்போன் பறித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து செல்போன்களை பறிகொடுத்த இருவரும் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், போலீசார் காஞ்சிபுரம் பழைய ரெயில்வே ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடுவதற்கு முயன்றனர்.
இதைப்பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிப் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அவர்கள் இருவரும் இரவு நேரங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், போலீசார் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவை சேர்ந்த புருஷோத் மற்றும் திருக்காலிமேட்டை சேர்ந்த சூர்யா உள்ளிட்டோரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றினர்.