தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: தமிழக வாழ்வுரிமை கட்சி வரவேற்பு 

சென்னை: “சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருப்பது வரவேற்கதக்கது.உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை வழக்கு தொடுக்கும் சாமானியர்கள் அறிந்து கொள்ள வசதியாக மாநில மொழிகளில் வெளியிட வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348 -வது பிரிவு, மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அந்தந்த மாநில மொழியை வைக்கலாம் எனக் கூறியுள்ளது. இது தொடர்பான மாநில அரசின் தீர்மானத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தாலே போதும். ஆனால் அதை ஒன்றிய அரசு செய்யாவில்லை.1976-ம் ஆண்டில் ஒன்றிய அரசு அலுவல் மொழி சட்டத்திருத்தத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்தலாம் என்றுள்ளது. அதையும் அவர்கள் செய்யவில்லை.

குறிப்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் வெளியிடும் திட்டம் கடந்த 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், அத்திட்டமும் செயல்பாட்டிற்கு வரவில்லை.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வெளியிடப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருப்பது வரவேற்கதக்கது.

அதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், உச்ச நீதிமன்றமும், ஒன்றிய அரசும் நிறைவேற்ற வேண்டும். இந்த நீண்ட கால கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.