தர்மபுரி மாவட்டத்தில் டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் நந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் தனுஸ்ரீ தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை தனுஸ்ரீ படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த தனுஸ்ரீ தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தனுஸ்ரீ தூக்கில் தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தர்மபுரி டவுன் போலீசார், உயிரிழந்த தனுஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.