பஞ்சாப் சிறையில் உள்ள சித்துவின் விடுதலையில் முட்டுக்கட்டை: ராகுல் நடைபயணத்தில் பங்கேற்கவில்லை..!

சண்டிகர்: பஞ்சாப் சிறையில் உள்ள சித்துவின் விடுதலையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், அவர் ராகுலின் நடைபயணத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரரான பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து,  1988ம் ஆண்டு சாலை விபத்து வழக்கில் சிக்கியதால், நீதிமன்ற உத்தரவுபடி பாட்டியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.  குடியரசு தினத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 51 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கான பட்டியலை சிறைத்துறை நிர்வாகம் தயாரித்து மாநில அரசுக்கு அனுப்பியதாக கூறப்பட்டது.

அந்தப் பட்டியலில்  நவ்ஜோத் சிங் சித்துவின் பெயரும் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கைதிகள் விடுவிப்பு தொடர்பாக மாநில அமைச்சரவை சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் எவ்வித பரிந்துரையும் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் இந்தாண்டு குடியரசு தினத்தன்று சிறைக் கைதிகள் எவரும் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ‘வரும் 30ம் தேதி ராகுலின் நடைபயணம் நகரில் முடிவடைகிறது. அன்றைய தின நிகழ்ச்சியில் நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் மாநில அரசு சிறைக் கைதிகளை விடுவிக்காததால் ராகுல் நிகழ்ச்சியில் சித்து பங்கேற்க வாய்ப்பில்லை’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.