புது டெல்லி: ஓஆர்எஸ் கரைசல் கண்டுபிடித்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸுக்கு மருத்துவத் துறையில் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பிறகு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் தன்னலமின்றி பணியாற்றிய, பணியாற்றி வரும் நபர்களுக்கு பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஓஆர்எஸ் கரைசல் கண்டுபிடித்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உயரிய விருதுகளில் பத்ம விருதுகள் அடங்கும்.
டயேரியாவுக்கு உடனடி தீர்வு தரும் ஓரல் ரீஹைட்ரேசன் சொல்யுசன் (ஓஆர்எஸ்) கரைசலை கண்டுபிடித்தவர் இவர். இதன் மூலம் உலகம் முழுவதும் சுமார் 5 கோடி பேர் காக்கப்பட்டுள்ளனர். இந்த மருந்து டயேரியா, காலரா பாதிப்புகளை 93 சதவீதம் குணமாக்கும்.
1971-ல் நடைபெற்ற வங்கதேச விடுதலை போரின் போது அகதிகள் முகாமில் பணியாற்றியவர். அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து அந்த அப்போது பணியை கவனித்தார். அந்த முகாமில்தான் ஓஆர்எஸ் மருந்தின் துல்லிய செயல்திறனை நிரூபித்தார். கடந்த 2022 அக்டோபரில் அவர் காலமானார்.