திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே உள்ளது நாச்சம்மாள்பள்ளம்புதூர். இந்த ஊரில் வசித்து வருபவர் விவசாயி குப்புசாமி (57). அதே கிராமத்தில் இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் நாய் ஒன்றினை வளர்த்து வந்திருக்கிறார். கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் அந்த நாயைக் காணவில்லை என மூலனூர் காவல் நிலையத்தில் குப்புசாமி புகார் அளித்தார்.
போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், குப்புசாமி தோட்டத்துக்கு அருகில் வசிக்கும் விவசாயி ராமலிங்கம் (53) என்பவர் நாயை அடித்துக் கொன்று, எரித்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் பேசுகையில், “குப்புசாமியின் நாய், ராமலிங்கத்தின் தோட்டத்துக்குள் அடிக்கடி வந்திருக்கிறது.
இதனால், ஆத்திரமடைந்த ராமலிங்கம் கடந்த ஜனவரி 19-ம் தேதி அந்த நாயை அடித்துக் கொன்று, அதன் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதையடுத்து, ராமலிங்கம் கைதுசெய்யப்பட்டு, காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டார்” என்று தெரிவித்தனர்.