அரியலூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் வினோத்குமார்(29). இவர் 15 வயதுடைய சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வினோத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியை பலாத்காரம் செய்த வினோத்குமாருக்கு ரூபாய் 2 லட்சம் அபராதமும் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூபாய் 7 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.