தஞ்சாவூர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக அரசுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு சசிகலா இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் சசிகலா கூறியது: “வீரவணக்கம் நாள் நிகழ்ச்சி இங்கு நடப்பது தமிழினம், நாடு என்பது இல்லாமல் தமிழரின் ஒற்றுமையைக் குறிக்கும். இங்கு உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி அமைப்பது குறித்து உங்களிடம் நிச்சயமாகச் சொல்வோம். ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் நடைபெறும் இடைத்தேர்தல் தமிழக அரசுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். என்ன மாதிரி ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தல் வரும் 27-ம் தேதி தான் நடைபெறவுள்ளது, அங்கு பிரச்சாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் முறை என்பது விருந்தோம்பலை கொண்டாடுவதுதான். அதனை தவிர்ப்பது என்பது அது தமிழ்நாட்டுக்கு அழகானதல்ல” எனத் தெரிவித்தார்.