இடைத்தேர்தல் என்பது சாக்கடை, போலியான வெற்றிதான் – ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதனால், இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 7 வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தி மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆளுங்கட்சியாக திமுக இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு, விசிக, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யமும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த காலங்களில் கலைஞரை மிக கடுமையாக விமர்சித்த நபர்.

”காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு உள்ளே போகவேண்டிவரும் என்பதால் தான் கூட்டணி தொடரும் என்று கருணாநிதி பேசி வருகிறார் என்றும் கூடா நட்புதான் கனிமொழியை சிறைக்கு அனுப்பியது” என்றும் 2011 ஆம் ஆண்டில் கலைஞரை தாக்கி பேசினார்.

மேலும், டிவி நேர்காணலில் இடைதேர்தலை குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிருப்தி தெரிவித்தும் பேசியுள்ளார். அந்த பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறுகையில், இடைத்தேர்தல் என்பது தமிழ்நாட்டில் சாக்கடையை போன்றது, சாக்கடை என்று தெரிந்தும் நாங்களே எப்படி காலை வைப்போம். எந்த ஆட்சியிலும் இடைதேர்த்தல் நியாயமாக நடந்ததில்லை. பணநாயகம் மட்டும்தான் நடக்கும். தற்போது ஆளுகின்றவர்களாக இருந்தாலும் சரி, இதற்கு முன்பு ஆண்டவர்களாக இருந்தாலும் சரி, மக்களுக்கு பணத்தை கொடுத்து அவர்களை அடிமையாக்கி வாக்குகளை வாங்கி போலி தனமாக வெற்றியை தான் மாலையாக மாற்றி கொள்கின்றனர்.

ஆகையால், இடைத்தேர்தலில் போட்டியிடுவது எதற்கும் பிரயோஜனம் கிடையாது, காலத்தை விரயம் செய்வதுதான் இடைத்தேர்தல்” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.