தலைமை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; தமிழக அரசுக்கு புதிய சிக்கல்.!

அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, ‘ஜாக்டோ – ஜியோ’ கூட்டமைப்பாக செயல்படுகின்றன. பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி நிலுவை தொகை, ஊதிய முரண்பாடுகள் நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில் நடந்த போராட்டத்துக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். இதனால், தி.மு.க., அரசு வந்ததும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், தி.மு.க., அரசு பொறுப்பேற்று, ஒன்றே முக்கால் ஆண்டுகளாகி விட்ட நிலையிலும், கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

எனவே, அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை, ஜாக்டோ – ஜியோ அறிவித்துள்ளது. மார்ச், 5ல், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம், மார்ச், 24ல் மனித சங்கலி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கான ஆயத்த மாநாடு, பிப்., 12ல் மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட உள்ளது.

இந்தநிலையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகமும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘தமிழகத்தில் மேல்நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்டு 45 வருடங்களாகியும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எங்களுடையா ஊட்டுப்பதவியில், கீழ் நிலையில் பணியாற்றியவர்கள் எங்களுக்கே ஆய்வு அலுவலர்களாக உள்ளதால், மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருகிறோம்.

தமிழகத்தில் வேறு எந்த துறையிலும் இப்படிப்பட்ட நிலை இல்லை. இந்த முரண்பாடுகளைக் களைய தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் கீழ்க்காணும் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் 25.02.2023 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 5.00 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த கடந்த 22.01.2023 அன்று திருச்சியில் நடந்த எங்கள் மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு நடடிக்கைகளை எடுத்து வரும் தமிழக அரசு, 45 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வே இல்லாத மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கிட விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

மாணவர்களின் தரம் மேம்பட, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் பணிகளில் மட்டும் ஈடுபடுத்தப்பட வேண்டும். EMIS, நலத்திட்டங்களை செயல்படுத்த தனி அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கிடும் வகையில் ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும்.

குடியரசு தினத்தன்று கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மே மாதத்திலேயே பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டு ஜுன் மாதம் பள்ளி திறக்கும் நாளிலிருந்தே பள்ளி அனைத்து ஆசிரியர்களுடன் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் அத்தனை சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கிட வேண்டும்.

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடமும், மாவட்டக்கல்வி அலுலர் பணியிடமும் ஒத்த ஊதிய விகிதத்தில் உள்ளதால் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றிய காலத்தை கணக்கில் கொண்டு மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தேர்வு நிலை வழங்கிட வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் அமைச்சு, அடிப்படைப் பணியாளயர்களை நியமிக்க வேண்டும். ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு, ஓய்வு பெறும் நாளிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் பணப்பலன்கள் அனைத்தையும் வழங்கிட வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.