மூன்றாம் முன்னணி; தெலங்கானா முதல்வரின் அதிரடி வியூகம்.!

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி முன்னணியை உருவாக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாம் கூட்டணியை உருவாக்க அவர் செயல்பட்டு வருகிறார்.

அந்தவகையில் ஹைதராபாத்தில் உள்ள கம்மம் நகரில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற பாரதிய ராஷ்டிர சமிதியின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கேரள முதல்வர், சிபிஎம் பினராயி விஜயன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐயின் டி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய அரசியலில் கேசிஆர் முன்னேறுவதை ஆதரித்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் எச்டி குமாரசாமி, கர்நாடகாவில் பஞ்சரத்ன ரத யாத்திரை (மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம்) மேற்கொண்டு வருவதால் அவர் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என கூறினார்.

நான்கு முதல்வர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்ட உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: “நேற்று பா.ஜ.க.வின் (தேசிய நிர்வாகி) கூட்டம் முடிந்தது. இன்னும் 400 நாட்கள் எஞ்சியிருப்பதாக அவர்களே கூறினர். இந்த அரசு தனது நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது. 400 நாட்களுக்குப் பிறகு அது நிலைக்காது’’ எனறு அவர் கூறினார்.

சந்திரசேகர ராவின் பேரணியில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸ் யாத்திரையைத் தவிர்த்துவிட்டன. அகிலேஷ் யாதவ் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் காங்கிரஸுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை தெளிவுபடுத்தியுள்ளனர். இருப்பினும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திரிபுராவில் காங்கிரஸுடன் சிபிஎம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சந்திரசேகர ராவ் தவிர, எதிர்க்கட்சியில் பிரதமர் பதவிக்கு பல போட்டியாளர்கள் உள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் தனது தேசிய லட்சியங்களை தெளிவாக்கியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் அப்படித்தான்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சந்திரசேகர ராவ் சந்தித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மூன்றாம் அணி இருக்காது என்று திட்டவட்டமாக கூறினார். “மூன்றாம் முன்னணி என்ற கேள்விக்கு இடமில்லை. காங்கிரசை உள்ளடக்கிய ஒரு முன்னணி இருக்க வேண்டும். அதன் பிறகு 2024-ல் பாஜகவை வீழ்த்தலாம்” என்று இந்திய தேசிய லோக்தளம் ஏற்பாடு செய்த பேரணியில் நிதிஷ்குமார் கூறினார்.

இந்தநிலையில் கேசிஆர் தலைமையில் எதிர்கட்சிகளின் மாநாடு நடைபெற்றது குறித்து அவர் கூறும்போது, ‘‘மாநாடு குறித்து எனக்கு தெரிவிக்கவில்லை. அழைப்பு இல்லை. அழைக்கப்பட்டவர்கள் மற்றும் சென்றுள்ளனர். எனக்கு வேறு வேலைகள் இருந்ததால் மாநாடு குறித்து தெரியவில்லை.

எதிர்கட்சிகளின் ஒற்றுமையைத் தான் நான் பலமுறை கூறிவருகிறேன். மூன்றாவது கூட்டணி உருவானால் அது ஆளும் பாஜகவிற்கு சாதகமான பலன்களை கொடுக்கும். எனக்கு எந்த பதவியும் வேண்டாம். எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வருகிற மக்களவைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதுதான் நாட்டிற்கு நலனை தரும்’’ என அவர் கூறினார்.

தடைசெய்யப்பட்ட பிபிசி ஆவணப்படம்; கேரளாவில் காங்கிரஸ் திரையிடல்.!

இந்தநிலையில் கேசிஆர் மேலும் ஒரு நகர்வை செய்துள்ளார். ஒடிசாவின் முன்னால் முதல்வர் கிரிதர் காமாங் மற்றும் அவரது மகன் சிஷிர் காமாங் உடன் இன்று மேடையை பகிர்ந்து கொண்டார். ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தெற்கு ஒடிசாவின் பழங்குடி தலைவரும், முன்னாள் முதல்வருமான கிரிதர் காமாங் கலந்து கொண்டார். தெலுங்கு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளின் முக்கிய தலைவர் பாஜகவில் இருந்து விலகிய பின்பு கேசிஆருடன் கைகோர்த்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.