ஹீரோயின் ஆனார் ஜாக்குலின்

விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளினி ஜாக்குலின். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றார். அதன்பிறகு பல மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நயன்தாரா நடித்த கோலாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது கெவி என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோயினாக ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார்.

ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கவுதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கெவி. தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். அறிமுக நடிகர் ஆதவன் இந்த படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் படத்தில் வில்லனாக நடித்த சார்லஸ் வினோத், திருநங்கை ஜீவா ஆகியோர் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் தமிழ் தயாளன் கூறும்போது, “கெவி என்பதற்கு அடிவாரம் அல்லது பள்ளம் என்று பொருள். மலை எப்போதுமே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் இன்னொரு இருட்டு பக்கம் யாருக்கும் தெரியாது. இத்தனை ஆண்டு கால தமிழக வரலாற்றில் எத்தனையோ ஆட்சிகள் மாறி இருக்கின்றன. எத்தனையோ விஷயங்கள் மாறி உள்ளன. ஆனால் இந்த மலைப்பகுதியில் இன்னும் மாறாத விஷயங்கள் இப்போதும் தொடர்ந்து வருகின்றன. இதை மையப்படுத்தி இந்த படம் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை பேசுகிறது.

ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கும்போது எவ்வளவோ அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.. அவர்களுடைய வலியை அருகில் இருக்கும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை சினிமா மூலமாக வெகுஜனத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும்போது ஏதாவது மாற்றம் நிகழ்ந்து விடாதா என்கிற நோக்கில் தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இதில் மலை கிராமத்து பெண்ணாக ஷீலா ராஜ்குமாரும், படத்தின் மற்றொரு நாயகியாக ஜாக்குலினும் நடித்துள்ளனர். இந்த இருவரும் சேர்ந்து பல பிரச்னைகளை எதிர்கொண்டு ஒரு இக்கட்டான சூழலை எப்படி சமாளிக்கின்றனர் என்பதை விறுவிறுப்பு கலந்து கூறியுள்ளோம்”என்றார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.