பட்ஜெட் 2023: ரெடியான ஜாக்பாட் அறிவிப்புகள்… மோடியின் தேர்தல் கணக்கு!

பிப்ரவரி ஒன்றாம் தேதி
மத்திய பட்ஜெட்
2023-24 தாக்கல் செய்யப்படவுள்ளது. இது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 11வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடப்பாண்டு தாக்கல் செய்யப்படுவதே முழுமையான பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்த பிறகு முழு பட்ஜெட் தாக்கலாகும்.

அடுத்தடுத்து தேர்தல்

இந்நிலையில் நடப்பாண்டில் மட்டும் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, கர்நாடகா, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 9 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதில் 5 மாநிலங்களில் பாஜக ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. எனவே மீண்டும் ஆட்சியை தக்க வைப்பது மட்டுமின்றி தனிப்பட்ட செல்வாக்கையும் அதிகப்படுத்த அக்கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பட்ஜெட் அறிவிப்புகள்

இத்தகைய சூழலில் மத்திய பட்ஜெட் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களுக்கு அச்சாரம் போடும் வகையில் சிறப்பு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கான சலுகைகளை உயர்த்தி வழங்குவது பாஜகவிற்கு பெரிதும் கைகொடுக்கும் எனச் சொல்லப்படுகிறது.

விவசாயிகளுக்கு சலுகை

கடந்த 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பாக PM Kishan திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதன்மூலம் விவசாயிகள் ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாயை பெற்று வருகின்றனர். இதே யுக்தி தெலங்கானா மற்றும் ஒடிசாவில் பெரிதாக எடுபட்டதை பார்க்கலாம். தெலங்கானாவில் ”ரைத்து பந்து” என்ற பெயரில் 2018ல் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

வெற்றி பெற்ற பின்னணி

இதன்மூலம் அறுவடை காலங்களில் ஏக்கர் ஒன்றுக்கு விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால் TRS கட்சியின் சந்திரசேகர் ராவ் அமோக வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தார். ஒடிசாவில் KALIA திட்டத்தின் மூலம் விவசாயிகள், நிலமற்ற விவசாய கூலிகள் உள்ளிட்டோருக்கு ஆண்டிற்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றது.

சலுகைகள்

எனவே PM Kishan திட்டத்தின் பலனை மேலும் அதிகப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பெரிய எதிர்பார்ப்பில் இருப்பது
வருமான வரி
சலுகை. நடுத்தர மக்களின் சுமையை குறைக்க வரி சலுகை வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. தற்போது 2.5 லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது. இந்த வரம்பை மேலும் உயர்த்தி அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய திட்டங்கள்

இதுதவிர ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச அறிவிப்புகள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் திட்டங்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள், புதிய ரயில் திட்ட அறிவிப்புகள், முடங்கியிருக்கும் திட்டங்கள் மீண்டும் புத்துயிர் பெறும் வகையிலான அறிவிப்புகள் உள்ளிட்டவை பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.