காரைக்குடி அருகே தனியார் இடத்தில் வைத்த பெரியார் சிலையை அகற்றிய தாசில்தார், டிஎஸ்பி இடமாற்றம்

காரைக்குடி: காரைக்குடியில் தனியார் இடத்தில் வைத்த பெரியார் சிலையை அகற்றிய தாசில்தார், டிஎஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரை சேர்ந்தவர் இளங்கோ. பெரியார் உணர்வாளரான இவர், கோட்டையூரில் உள்ள தனது வீட்டின் சுற்றுச்சுவரில் பெரியார் மார்பளவு சிலையை நிறுவினார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக காரைக்குடி தாசில்தார் கண்ணன், தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் திறப்பு விழாவிற்கு தடை விதித்தனர்.

இதற்கு, தனியார் இடத்தில் சிலை வைக்கலாம் என்ற உயர்நீதிமன்ற பொது ஆர்டர் உள்ளது என கணேஷ்குமார் தெரிவித்தார். இதனை ஏற்காத அதிகாரிகள் சிலையை இயந்திரம் மூலம் பெயர்த்து எடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாசில்தார் மற்றும் டிஎஸ்பிக்கு பெரியார் உணர்வாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே, சிலையை அகற்றிய தாசில்தார் கண்ணன், தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோரை நேற்று பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.