மத்திய பட்ஜெட் 2023-ல் ஏழைகளுக்கு ஏதும் இல்லை: காங்., திரிணமூல் காங். விமர்சனம்

புதுடெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”விரைவில் வரக்கூடிய 3, 4 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் இல்லை.

இதேபோல், வேலைவாய்ப்பை பெருக்கவோ, காலியாக உள்ள அரசு பணிகளை நிரப்பவோ, மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் குறித்தோ இந்த பட்ஜெட்டில் ஏதும் குறிப்பிடப்படவில்லை” என குற்றம் சாட்டினார்.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், ”இந்த பட்ஜெட்டில் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கிராமப்புற ஏழை தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு, பணவீக்கம் உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அடிப்படையான பல்வேறு கேள்விகளுக்கு இந்த பட்ஜெட்டிலும் பதில் இல்லை” என விமர்சித்தார்.

இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு எதிரானது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். ”இந்த பட்ஜெட் தொலைநோக்குப் பார்வை கொண்டது அல்ல. சந்தர்ப்பவாத பட்ஜெட் இது. மக்கள் விரோதமான, ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் இது. இந்த பட்ஜெட் ஒரு வகுப்பினருக்கு மட்டுமே பயனளிக்கும்.

நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் எவ்வித தீர்வும் இல்லை. இந்த பட்ஜெட் வரக்கூடிய 2024 நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

வாசிக்க > வருமான வரிச் சலுகை முதல் நிதி ஒதுக்கீடுகள் வரை: மத்திய பட்ஜெட் 2023-ல் கவனம் ஈர்த்த அறிவிப்புகள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.