அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த செம்மொழிப் பூங்காவுக்கு பூட்டு போடப்பட்டது

ராசிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட கட்டணமில்லா செம்மொழி பூங்காவிற்கு நுழைவு கட்டணம் கேட்டு  பெற்றோர்களை ஆபாசமாக  தரகுறைவாக பேசிய திமுக பெண் நிர்வாகியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய சம்பவத்தையடுத்து காணொலி காட்சிமூலம் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி பூங்கா 5 நாட்களில் நகராட்சி நிர்வாகம் இழுத்து பூட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசு சார்பில் செம்மொழி பூங்காவனது புதிதாக நிறுவப்பட்டது. இதனை இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 28-ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிலையில் பூங்காவின் அருகில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. பள்ளி முடிவு பெற்ற பிறகு அவ்வழியாக செல்லும் குழந்தைகள் பூங்காவிற்கு சென்று  விளையாடி வருவது வழக்கம். 

இந்த நிலையில் இந்த பூங்கவிற்கு நகராட்சி சார்பில் எவ்வித நுழைவு கட்டணம் விதிக்காத நிலையில் ராசிபுரத்தை சேர்ந்த திமுக மகளிரணி அமைப்பாளர் புஷ்பா என்பவர் தன்னிச்சையாக சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு 10 ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பூங்காவிற்கு செல்ல 10 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதை கண்டு பெற்றோர்கள் தட்டிக் கேட்க புஷ்பாவிற்கும் பெற்றோர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த புஷ்பா, “10 ரூபாய் கூட கட்டணம் கட்ட வக்கு இல்லாமல் இங்கு ஏன் வந்தீர்கள்,” எனவும் தர குறைவாகவும் ஆபாசமாக  பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த பெற்றோர்களை தரகுறைவாக பேசி குழந்தைகளையும் பெற்றோர்களையும் வெளியேற்றினார். கட்டணமில்லா செம்மொழி பூங்காவிற்கு தன்னிசையாக ரசீது இல்லாமல் திமுக பெண் கட்டணம் வசூலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் காரணமாக தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்த 5 நாட்களில் நகராட்சி நிர்வாகம் இழுத்து பூட்டியது. இதனால் ஆர்வமுடன் குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் நாளை (03.02.23) செம்மொழி பூங்காவை பராமரிப்பது தொடர்பாக ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களுக்கு அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்தில் பேசி பூங்காவை பராமரிப்பது குறித்தும் பூங்காவிற்கு கட்டணம் விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.