மதுரை மாவட்டம் கோச்சடை அருகே உள்ள நடராஜ் நகரில் வசித்து வருபவர் விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் உமாசங்கர். உமா சங்கருக்கு அனிதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரித்துள்ளனர்.
இந்த நிலையில் தேனியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட உமாசங்கர் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக 2வது மனைவியுடன் தேனிக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து அவர் மட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு திரும்பி உள்ளார். நேற்று காலை 2வது மனைவி வீட்டுக்கு வந்த போது கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது விஜயலட்சுமி மற்றும் அவரது மகன் உமாசங்கர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருவரின் உடலையும் கைப்பற்றிய கரியமேடு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2வது மனைவியிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் உமாசங்கர் பங்குச்சந்தைகளில் செய்த முதலீடுகள் அனைத்தும் நஷ்டம் அடைந்து விட்டதால் அதிக கடன் வாங்கியுள்ளார். அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என 2வது மனைவி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் உமாசங்கர் வீட்டில் நடத்திய சோதனையில் கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில் “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது விவாகரத்து வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வந்துவிட்டது. அதில் முதல் மனைவிக்கு விவாகரத்து கிடைத்து விட்டது. ஆகவே நீதிமன்றத்தில் தெரிவித்தபடி முதல் மனைவி கொண்டு வந்த சீர்வரிசை பொருட்களை எல்லாம் அவரது வீட்டில் கொடுத்து விடுங்கள். எங்களது இறுதிச் சடங்கை மாமா நீங்கள் எளிமையாக நடத்தி விடுங்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.