சென்னை அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர், சக நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலவாக்கம் பகுதியை சேர்ந்த ராகவேந்திரா (25) என்ற இளைஞர், தனது நண்பர்களான பாலாஜி, அஜய், நிஜாமுதீன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
போதையில் இருந்த நண்பர்கள் ராகவேந்திராவை மரியாதை குறைவாக பேசியதாக தெரிகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த ராகவேந்திரா முதலில் இரண்டு பேரை தாக்கியுள்ளார்.
பின்னர் நான்கு நண்பர்களும் சேர்ந்து ராகவேந்திராவை தாக்கி, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸூக்கும் போன் செய்து வரவழைத்தனர். பின்னர் ராகவேந்திரா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீஸார், குற்றச்செயலில் ஈடுபட்ட பாலாஜி, விவேக், அஜய், நிஜாமுதீன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, இது மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறா அல்லது திட்டமிட்ட கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in