அடிதடி வழக்கில் இருந்து மகனை விடுவிப்பதாக கூறி தாய்க்கு செக்ஸ் டார்ச்சர்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் அடிதடி வழக்கிலிருந்து பிளஸ்2 படிக்கும் மகனை விடுவிப்பதாக கூறி, தாய்க்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்த திருவனந்தபுரம் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாளையம் என்ற இடத்தில் ஒரு ஆங்கிலப்பள்ளி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இடையே அடிதடி, மோதல் ஏற்பட்டது. இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். இது தொடர்பாக திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சில மாணவர்களின் பெற்றோரின் தொலைபேசி எண்களை போலீசார் வாங்கி வைத்திருந்தனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த ஸ்டேஷனில் பணிபுரியும் அசோக்குமார் என்ற சப் இன்ஸ்பெக்டர் ஒரு மாணவனின் தாயை செல்போனில் அழைத்துள்ளார். மகனின் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், தன்னுடைய வீட்டுக்கு உடனடியாக வரவேண்டும் என்றும் அவரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் வீட்டுக்கு வர முடியாது என்றும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வேண்டுமென்றால் வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதன் பிறகும் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் பலமுறை மாணவனின் தாயை தொடர்பு கொண்டு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் பேசியதை தன்னுடைய போனில் பதிவு செய்து வைத்த மாணவனின் தாய், திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் நாகராஜுவிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார், மாணவனின் தாயிடம் முறைகேடாக நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் நாகராஜு உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.