ஈரோடு தொழில் துறையினரின் கோரிக்கைகளை முதலமைச்சர் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உரை

ஈரோடு: ஈரோடு தொழில் துறையினரின் கோரிக்கைகளை முதலமைச்சர் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று ஈரோட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவு கோரினார்.

அப்போது தான் ஒன்றிய அமைச்சராக இருந்த போது தொழில் துறையை பாதித்த சென்ட் வாட் வரியை நீக்க பாடுபட்டதாக தெரிவித்தார். மேலும் தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று கூறிய இளங்கோவன். தற்போது ஈரோட்டில் மகன் விட்டு சென்ற பணியை தொடர விரும்புகிறேன் என்று தெரிவித்தார். அத்துடன் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மூலமாக கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.

ஈரோடு கருங்கல் பாளையத்தில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். இந்த ஆட்சியின் திட்டங்களும், முதலமைச்சர் பணிகளும் வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் ஈரோடு மாநகராட்சியை மிக சிறந்த மாநகராட்சியாக மாற்றுவதற்கு முதலமைச்சர் ரூ.400 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.