
வாணி ஜெயராம் இறந்தது எப்படி? – வீட்டு பணிப்பெண் பரபரப்பு தகவல்
சென்னை: பின்னணி பாடகி வாணி ஜெயராம், வீட்டில் தனியாக வசித்து வந்ததார். பல முறை அழைத்தும் கதவு திறக்கப்படாததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தேன் என அவரது வீட்டில் பணிபுரிந்தவர் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 19மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த அவர் இன்று(பிப்., 4) காலமானார். தவறி விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக தவவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி வாணி ஜெயராம் வீட்டில் பணிபுரியும் மலர்கொடி நிருபர்களிடம் கூறுகையில், வாணி ஜெயராம் வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக, அவரது வீட்டில் அனைத்து வேலைகளையும் நான் தான் செய்து வருகிறேன்.
இன்றைக்கு 10:45 மணிக்கு நான் வீட்டிற்கு வந்து அழைப்பு மணியை 5 முறை அடித்தும் அவர் திறக்கவில்லை. மொபைலில் அழைத்தும் அதனை ஏற்கவில்லை. எனது கணவர் அழைத்தும் அவர் மொபைலை எடுக்கவில்லை. வீட்டின் கதவும் திறக்கப்படாததால், கீழ் வீட்டினருடன் ஆலோசித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தோம்.
அவர் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு வாழ்த்துகள் வந்து கொண்டிருந்தன. எந்த நோய்க்கும் எந்த சிகிச்சையும் எடுக்கவில்லை. தற்போது அவரது நெற்றியில் காயம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். வாணி ஜெயராம் உடல் சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டது.