புனே: மாஜி இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது அவரது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. இவர் மகாராஷ்டிராவின் பந்த்ரா (மேற்கு) பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், காம்ப்ளி மீது அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், காம்ப்ளி நன்றாக குடித்து விட்டு, போதையில் குடியிருப்புக்கு வந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார்.
இதனை எனது 12 வயது மகன் உடனிருந்து பார்த்தார். மேலும் சமையலறைக்குள் சென்று சமையல் செய்ய உபயோகப்படும் பாத்திரம் ஒன்றின் கைப்பிடியை எடுத்து வந்து என் மீது வீசினார். இதில், எனது தலையில் காயம் ஏற்பட்டது’ என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பந்திரா போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.