ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் | ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்: இரட்டை இலை வெற்றிக்காக பிரச்சாரம் என அறிவிப்பு

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என்று ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். மனு தாக்கல் செய்ய நாளை (பிப்.7) கடைசி நாள்.

இதற்கிடையே, பழனிசாமி தரப்பில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தனது தரப்பு வேட்பாளருக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதில், இருதரப்பினரும் கலந்துபேசி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு மூலமாக வேட்பாளரை தேர்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்மகன் உசேன் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர். இந்நிலையில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் இன்று (பிப்.6) மாலை அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என்று ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருந்து எங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுகிறார். இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுகிறார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் இரட்டை இலை வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம்.தென்னரசுக்கு அல்ல. இபிஎஸ் அறிவித்த வேட்பாளருக்கு பிரச்சாரம் இல்லை. இரட்டை இலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்வோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.