சென்னை: நீதிபதி விக்டோரியா கெளரி நியமனத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்திய மக்களிடையே மத அடிப்படையில் வெறுப்பை மூட்டும் விதத்தில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான பேச்சுக்களை பேசி வந்த பாஜக நிர்வாகி விக்டோரியா கெளரி இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமன நடவடிக்கை நீதித் துறையின் மீதான நம்பிக்கையை பாதித்துள்ளது. நீதிபதியாக செயல்படுவோர் தனிப்பட்ட அரசியல் கருத்துகளை கொண்டிருக்கலாம். ஆனால் அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதமாக வெறுப்புப் பேச்சுக்களை பேசியவர், அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்களை காக்க செயல்படுவாரா?
கொலீஜியம் முடிவிற்கு எதிராக வழக்கறிஞர்களும், அரசியல் கட்சிகளும் கொந்தளித்தது நியாயமானது. தற்போது, உச்ச நீதிமன்றம் இது பற்றிய வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆனால், பாஜக ஒன்றிய அரசு முந்திக் கொண்டு நியமனத்தை உறுதி செய்துள்ளது. எனவே, பிரச்சினையின் தீவிரத்தை கணக்கில் கொண்டு, உச்ச நீதிமன்றம் இந்த நியமனத்தை ரத்துச் செய்து நீதித் துறையின் மாண்பினை பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய மக்களிடையே மத அடிப்படையில் வெறுப்பை மூட்டும் விதத்தில் கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான பேச்சுக்களை பேசி வந்த பாஜக நிர்வாகி, விக்டோரியா கெளரி அவர்கள் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) February 6, 2023