வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு: யாத்திரையை பரிசீலிக்க உத்தரவு!

தேர்தலில் பயன்படுத்தப்படும் EVM வாக்கு இயந்திரம் மூலம் நடைபெறும் முறைகேடுகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் யாத்திரை நடந்த காவல்துறை அனுமதி வழங்கக் கோரிய வழக்கில், யாத்திரை தொடர்பாக பரிசீலிக்க போலீசாருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த பாரத் முக்தி மோச்சா சார்பாக விக்கி செளத்தரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “பாரத் முக்தி மோச்சா சார்பாக தேர்தலில் பயன்படுத்தப்படும் EVM வாக்கு இயந்திரம் மூலம் நடைபெறும் முறைகேடுகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ராஷ்ட்ரிய பரிவர்தன் யாத்ரா நடத்த உள்ளோம்.

இதற்காக கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளர் இடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசல் சுற்றுலா தளம் போன்ற காரணங்கள் காரணமாக யாத்திராவிற்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தனி மனித உரிமையை பறிக்கும் செயலாகும்.

எனவே, தேர்தலில் பயன்படுத்தப்படும் EVM வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடைபெறும் முறைகேடுகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் யாத்ராவிற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை ரத்து செய்து யாத்திரைக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, யாத்திரை குறித்து முழு விவரங்களுடன் புதிய மனுவை கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் இடம் வழங்கவும், அதனை 3 நாட்களுக்குள் கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் பரிசீலனை செய்து உத்தரவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.