ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி; உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு..!!

காக்கிநாடா: காக்கிநாடா மாவட்டம் ஜி.ராகம்பேட்டா பகுதியில் மூச்சுத்திணறி 7 பேர் பலியான விவகாரத்தில் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பட்டி சுப்பண்ணா என்பவரின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆயில் டேன்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.  ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் பெத்தாபுரம் மண்டலம் ஸ்ரீரங்கம்பட்டியில் அம்பட்டி சுப்பண்ணா என்பவருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் வழக்கம் போல் ஊழியர்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். 30 தொழிலாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொண்ட நிலையில், 7 தொழிலாளர்கள் ஆயில் டேன்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அச்சமயம் எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கி பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

சம்பவ இடத்திலேயே 7 பேரும் உயிரிழந்தனர். படேரு பகுதியை சேர்ந்த 5 பேரும், புலிமேருவை சேர்ந்த 2 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலை நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காததே தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு காரணம் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுத்திகரிப்பு ஆலைக்கு சீல் வைத்து அதன் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.