ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை விண்ணில் பாயும் இஸ்ரோவின் 'SSLV D2' ராக்கெட் சிறப்பம்சங்கள்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி டி2 (SSLV – D2) ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

வளரும் நாடுகள், சிறிய செயற்கைக்கோள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கை கோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான சந்தையை வழங்கும் வகையில் இஸ்ரோ SSLV ரக ராக்கெட்களை உருவாக்க தொடங்கியுள்ளது. இஸ்ரோ சார்பாக இதுவரை பிஎஸ்எல்வி ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட் மூலம் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிலையில் SSLV ரக ராக்கெட்கள் 500 கிலோவிற்கு குறைவான செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
image
இவ்வாறாக SSLV D1 ரக ராக்கெட்டை வடிவமைத்தை இஸ்ரோ கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆனால் புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும் போது சென்சார் செயலிழப்பின் காரணமாக செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், விரைவில் SSLV D2 ரக ராக்கெட் உருவாக்கப்படும் என இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் அறிவித்திருந்தார்.

அதன்படி நாளை காலை 9:18 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எஸ்எஸ்எல்வி டி2 ரக ராக்கெட் 3 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான அனைத்து ஆரம்பகட்ட பணிகள் மற்றும் பரிசோதனை நிலைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
image
இஸ்ரோவின் இஓஎஸ்-07(EOS-07), அமெரிக்க நிறுவனமான அன்டாரிஸ் ஜானுஸ்-1 மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஆசாதிசாட்-2(AzaadiSAT-2) என மொத்தமாக 175.2 கிலோ எடை கொண்ட மூன்று செயற்கைக்கோள்களை புவி வட்ட சுற்றுப்பாதையில் 450 கிலோமீட்டர் உயரத்தில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்தப்பட்ட SSLV D1 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வி அடைந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட SSLV D2 ரக ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தும் முனைப்பில் இஸ்ரோ உள்ளது.

புவிநோக்கு செயற்கைக்கோள் (EOS -07)

எடை : 156.3 கிலோ

இயங்கு காலம் : ஒரு ஆண்டுகள்

புதிய தொழில் நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அலைக்கற்றை கண்காணிப்பு அமைப்பு, அதிநவீன மைக்ரோவேவ் சவுண்டர் இவற்றில் இணைக்கப்பட்டுள்ளது இந்த செயற்கைக்கோளின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. சிறிய ரக (micro satellite) செயற்கைக்கோள் வடிவமைப்பில் புதிய முயற்சியாக இந்த புவி நோக்கு செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதனுடைய வடிவமைப்பு இது சுற்றுவதில் நெகிழ்ச்சி தன்மையை உண்டாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

image
ஜானுஸ்-1 :

எடை : 10.2 கிலோ

அமெரிக்க நிறுவனமான அன்டாரிஸ் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக்கோள்
மென்பொருள் இயக்க பயன்பாட்டிற்காக இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆசாதிசாட்-2 :

எடை : 8.7 கிலோ

சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஆசாதிசாட்-2 செயற்கைக்கோள் நாடு முழுவதும் 75 பள்ளிகளைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 750 கிராமப்புற மாணவிகளுக்கு பயிற்சி அளித்து உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.