ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இள்ங்கோவன் அவர்களுக்கு ஆதரவாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வருகிற 19-ம் தேதி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.
இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்
இத்தேர்தலில் , மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, இடைத்தேர்தலில் மநீம தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்த்த நிலையில் ,கமல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். மேலும் காங்கிரஸ் வேட்பாளாரை ஆதரித்து ஈரோட்டில் தீவிர பரப்புரையில் கமல் ஹாசன் ஈடுபடுவார் என்றும், இம்மாதம், முதல் அல்லது 2 வது வாரத்தில் பிரச்சாரத்தை கமல் தொடங்க திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து வருகின்ற பிப்-19ம் தேதி கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். 5 இடங்களில் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ள கமல்ஹாசன் ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.