இந்தியாவில் அதிகரிக்கும் தங்க கடத்தல்: 2022-ல் மட்டும் 3,500 கிலோ தங்கம் பறிமுதல்

புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு கடத்தல் தங்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு மட்டும் 3,500 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 7.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தங்கம் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு 2,155 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் தொடர்புடைய 2,567 பேர் கைது செய்யப்பட்டனர்.

2021-ல் 2,383 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்ட 2,445 பேர் பிடிபட்டனர். 2022-ல் 3,502 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 3,982 பேர் கைது செய்யப்பட்டனர். 2020-க்கும் 2022-க்கும் இடையே தங்கக் கடத்தல் 62.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் இதனை தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக 4,500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் 414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 115 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பிடிபடும் தங்கத்தின் அளவு மிகவும் குறைவுதான் என்றும் கடத்தல் தங்கத்தின் உண்மையான அளவு அதிக அளவில் இருக்கும் என்றும், இது குறித்து அறிந்தவர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 160 டன் தங்கம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.