கன்னட நடிகர், கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்தளித்த பிரதமர் நரேந்திர மோடி – கர்நாடக தேர்தல் விளம்பரம் என காங்கிரஸ் விமர்சனம்

பெங்களூரு: கன்னட நடிகர்கள் யஷ், ரிஷப் ஷெட்டி, கிரிக்கெட் வீரர்கள் அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோருக்கு பிரதமர் நரேந்திர‌ மோடி பெங்களூருவில் இரவு விருந்து அளித்தார்.

பெங்களூருவில் ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை பெங்களூரு வந்தார். அவரை கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் சினிமா, விளையாட்டு, தொழில், சமூக வலைதளம் ஆகியவற்றில் வெற்றிகரமாக இயங்கிவரும் 20க்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்களை திடீரென இரவு விருந்துக்கு அழைத்தார்.

அதன்பேரில் கே.ஜி.எஃப் படத்தில் நடித்த யஷ், காந்தாரா படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டி, மறைந்த கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி ஆகியோர் மோடியை சந்தித்து பேசினர்.

அப்போது கன்னட திரையுலகம் குறித்தும், கேஜிஎஃப், காந்தாரா ஆகிய திரைப்படங்கள் குறித்தும் அவர்களிடம் பிரதமர் பேசியதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, முன்னாள் வீரர்கள் ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரையும் தற்போது இந்திய அணிக்காக ஆடிவரும் மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே உள்ளிட்டோரையும் சந்தித்து, விளையாட்டுத் துறை சார்ந்து பேசினார்.

யூடியூப் பிரபலத்துடன் சந்திப்பு: இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஏத்தர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா, ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் ஆகியோரையும் சந்தித்து பேசினார். பெங்களூருவில் புதுமையான தொழில் வாய்ப்புகள், தொழிலை வளர்த்தெடுக்க மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து அவர்களிடம் பிரதமர் பேசினார்.

யூடியூப் பிரபலமான ‘அய்யோ’ ஷ்ரத்தாவை சந்தித்த போது பிரதமர் நரேந்திர மோடி அவரை, ‘ஹாய்.. அய்யோ’ என அழைத்ததாக ஷ்ரத்தா தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘என் கடவுளே, மாண்புமிகு பிரதமர் உண்மையாகவே அவ்வாறு சொன்னார்? இதெல்லாம் உண்மையா?” என வியப்பை வெளிப்படுத்தினார்.

பின்னர் பிரதமர் மோடி அனைவருக்கும் இரவு விருந்து அளித்து உபசரித்தார். மேலும் அனைவரையும் கர்நாடகாவில் நேர்மறை உணர்வை வளர்ப்பதற்காகவும், இளைஞர்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்துவதற்காகவும் பாராட்டியதாக கர்நாடக பாஜக வ‌ட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே கூறும்போது, ”இன்னும் சில மாதங்களில் கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பிரதமர் மோடி பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இது ஒருவகையான தேர்தல் விளம்பரம்தான். இதனால் கர்நாடக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது”என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.