அணைக்கரைப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பெரிய அணைக்கரைப்பட்டியில் புனித அந்தோணியர் மற்றும் செபஸ்தியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் திருச்சி, திண்டுக்கல், கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இறுதியில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

இன்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ரங்கம் ஆர்டிஓ செல்வராஜ் துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி களத்தில் பல காளைகள் நின்று விளையாடியது. காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், டிவி, தங்கக்காசு, வெள்ளிக்காசு, மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சிறந்த காளைக்கு பிரிட்ஜ் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு டிவி பரிசாக வழங்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.