நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் காலமானார்; தமிழ் திரையுலகம் அதிர்ச்சி!

பிரபல தமிழ் நடிகர் மயில்சாமி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 57. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். காரில் சென்று கொண்டிருக்கும் போதே பாதிப்பு மோசமானதாக தெரிகிறது.

நடிகர் மயில்சாமி மரணம்

இந்நிலையில் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் மயில்சாமி திடீர் மறைவு தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மயில்சாமிக்கு அறுவை சிகிச்சை

நடிகர் மயில்சாமி ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு உடல்நலம் தேறி வந்த நிலையில் இன்று எதிர்பாராத மரணம் நிகழ்ந்துள்ளது. மயில்சாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களில் மயில்சாமி

பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்து வந்தவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர் போன்ற அடையாளங்களை பெற்றவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்தவர். ஆனால் வளர்ந்தது எல்லாம் கோவையில் தான். சினிமா ஆசை காரணமாக சென்னை வந்து சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். 1984ஆம் ஆண்டு முதல் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

எம்.ஜி.ஆர் பக்தன்

100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு அரசியல் ரீதியான கருத்துகளை அவ்வப்போது முன்வைத்து வந்தார். தீவிரமான எம்.ஜி.ஆர் பக்தர். இதனால் அரசியல் ரீதியாக பேசும் போது அதிமுகவின் தற்போதைய நிலையை சுட்டிக் காட்டி மிகவும் வேதனை அடைவார்.

மயில்சாமி செய்த உதவிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் தான் வசித்து வந்த விருகம்பாக்கம் தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிதியுதவி பெற்று ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதை முதன்மையாக கொண்டு செயல்பட்டவர். 2021ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

மயில்சாமி வீடு

இவரது மகன்கள் அன்பு, யுவன் ஆகிய இருவரும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவரது வீட்டின் நுழைவு வாயிலில் இருபுறமும் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் மிகவும் பிரபலம். ஒருபுறம் “அன்பே கடவுள் இல்லம்” எனவும், மறுபுறம் ”நல்லவன் வாழ்வான்” எனவும் எழுதப்பட்டிருக்கும். இதுதவிர விநாயகரின் உருவப் படத்தை பெரிதாக வைத்திருப்பார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.