திருச்செந்தூர் அமலி நகர் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்: பட்ஜெட்டில் அறிவித்தபடி தூண்டில் பாலம் அமைக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி: தூண்டில் பாலம் அமைத்துத் தரக்கோரி திருச்செந்தூர் அமலி நகர மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்தில் சுமார் 192 பைபர் படகுகள் உள்ளன. இப்பகுதியில் தூண்டில் பாலம் இல்லாததால் மீனவர்கள் மீன் பிடிக்கும் செல்லும் போதும் கரை திரும்பும் போதும் படகுகள் சேதமடைந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அமலி நகரில் உடனடியாக தூண்டில் பாலம் அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிப்புக்கு செல்லாமல் படகுகளில் கருப்பு கொடியேற்றி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மீனவர்கள் கோரிக்கையடுத்து அமலி புரத்தில் தூண்டில் பாலம் அமைக்கப்படும் என்று 2022 – 2023 பட்ஜெட்டில் அறிவித்த தமிழ்நாடு அரசு அதற்காக ரூ.84 கோடியில் திட்டத்தையும் தயாரித்து இருந்தது.

ஆனால், கடற்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தூண்டில் பாலம் அமைக்கக்கூடாது என்று கூறி தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. இதனால், அமலி நகரில் தூண்டில் பாலம் அமைப்பதற்கான பணிகள் தடைப்பட்டுள்ள நிலையில் தற்போது அப்பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.