2001ல் குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, மீட்புக் குழுவில் நானும் சேர்ந்து பணியாற்றினேன் : பிரதமர் மோடி

டெல்லி : உலக அளவில் சிறந்த மீட்புக் குழுவாக இந்திய மீட்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். துருக்கியில் நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு பின்னர் நாடு திரும்பிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மத்தியில் பேசிய அவர், :இந்தியா மனிதநேயத்தை முதன்மையாக கொண்ட நாடு. உலகம் முழுவதையும் ஒரேகுடும்பமாக கருதுகிறோம் .குடும்பத்தில் ஒருவருக்கு கஷ்டம் இருந்தால் அதற்கு உதவுவது இந்தியாவின் கடமை,’ என்றார்.

நேபாளத்தில் பூகம்பப் பாதிப்பு, மாலத்தீவுகள், இலங்கை என எங்கு பிரச்சனை ஏற்பட்டாலும் இந்திய மீட்புக் குழுவினர் சென்று உதவி செய்ததை சுட்டிக் காட்டினார். கடந்த ஆண்டு உக்ரைன் நாட்டில் கடும் பனி, குளிரில் தவித்த மக்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி உதவி செய்ததையும் அவர் சுட்டிக் காட்டினார். குஜராத்தில் தானும் மீட்புக் குழுவினருடன் பணியாற்றியதாகவும் மோடி நினைவுக் கூர்ந்தார்.

இது தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, ‘2001ம் ஆண்டு குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, மீட்புக் குழுவில் நானும் சேர்ந்து பணியாற்றினேன்.அப்போது இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பது கடினமான பணி என்பது புரிந்தது.எனவே உங்கள் சேவையை பாராட்டுகிறேன்,’என்றார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.