இந்திய டெக்டானிக் பிளேட் 5 செ.மீ. நகர்கிறது… உத்தராகண்டில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம் : விஞ்ஞானிகள் தகவல்!!

டெல்லி: இந்திய டெக்டானிக் பிளேட் ஆண்டுதோறும் 5 செ.மீ. நகர்வதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி என்.பூர்ணசந்திர ராவ் கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு நாடுகளில்  நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. பிப்ரவரி 6ம் தேதி துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 46,000 மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து,  பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, ஜப்பான் என பல நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதனிடையே இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான அசாம், சிக்கிம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கங்கள் அண்மையில் ஏற்பட்டன.

இந்த நிலையில் நிலநடுக்கங்கள் குறித்து கருத்து தெரிவித்த தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி என்.பூர்ணசந்திர ராவ்,’இந்திய டெக்டானிக் பிளேட் ஆண்டுக்கு 5 செ.மீ. வீதம் இந்திய கண்டத்தட்டு நகர்வதால் தட்டுகள் இணையும் பகுதியில் அழுத்தம் அதிகரித்து வருகிறது;  கண்டத்தட்டுகள் இணையும் பகுதி இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் அங்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இமயமலையில் அமைந்துள்ள உத்தராகண்ட்டில் நிலநடுக்கம் வர வாய்ப்பு அதிகம்; உத்தராகண்ட்டில் மட்டுமே பூமி அதிர்வை அளவிடும் 18 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன,’என தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.